எளிய வாசகர் - உள்ளம் கவர்ந்த கருத்து.


நேன்று நூலகத்தில் ஒரு நெகழ்ச்சியான சம்பவம். அதைப் பற்றி உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
 கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்தூர் கிளை நூலகத்தில் நூலக வார விழா நடைபெற்றது. வழக்கம் போல, ‘நூலகத்தில் அதிக புத்தகங்கள் எடுத்து வாசித்த வாசகர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி' நடைபெற்றது.
பரிசு பெற்ற வாசகர்களுள் ஒருவரான திருமதி தமிழ்ச்செல்வி என்பவர் நேற்று மாலை நூலகத்துக்கு வந்தார். நூலக விழா சிறப்பாக இருந்தது என்றும், தனக்கு பரிசு வழங்கப்பட்டதற்கு நன்றி என்றும் கூறினார்.
 "இது வழக்கமான நிகழ்ச்சிதான், இதற்கு, எதற்கு நன்றி?" என்றேன்.
 "டாக்டர் சந்திரசேகரன் கையால் எனக்கு பரிசு கிடைத்தது மகிழ்ச்சி" என்றார்.
"இந்த நன்றியையும் மகிழ்ச்சியும் அன்றே கூறி இருக்கலாம். 'ஏதாவது பேசுங்கள்' என்று அழைத்தேன். நீங்கள் பேச மறுத்து விட்டீர்கள்!" என்றேன்.
"கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அதிகம் படித்தவர்கள் என்பதால், எனக்கு பேச தயக்கமாக இருந்தது. இருந்தாலும் ‘என் மனதில் சொல்ல வேண்டும் என்று இருக்கிறதை’ உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்திருக்கிறேன்" என்றார்.
"கூட்டம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன; எல்லாம் மறந்துவிட்டு அடுத்த வேலைக்கு வந்து விட்டேன்" என்றேன்.
"நீங்கள் எல்லோரும் மறந்து விடலாம். ஆனால், என்னால் அந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. மேடையில் என்னை கௌரவித்து, புத்தகம் பரிசாக கொடுத்ததோடு, அன்பளிப்புத் தொகையும் டாக்டர் கொடுத்தது, எனக்கு ரொம்ப சந்தோஷம்அது மறக்க முடியாத சம்பவம். ஏனென்றால், நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்றேன்அப்பொழுது எனக்கு பரிசு வழங்கியவர் டாக்டர்தான்.  25 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அவர் கையால் பரிசு பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
அதற்கு நான், “தேர்ந்தெடுக்கப்பட்ட வாசகர்களுக்கு துண்டு போட்டு, புத்தகம் பரிசாக கொடுப்பது என்பதுதான் என் ஏற்பாடு. பரிசுசோடு அன்பளிப்பு கவரும் டாக்டர் கொடுத்தார். அந்த நிமிடம் வரை அவரது ஏற்பாடு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றேன்.
மேலும் அவர் கூறுகையில்,  "நான் பத்தாம் வகுப்பு முடித்தவுடன், எனக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். மூன்று பெண் பிள்ளைகள் பிறந்த பிறகு கணவர் என்னைவிட்டு பிரிந்து சென்று விட்டார்.
  மூன்று பெண் பிள்ளைகளையும் கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைத்திருக்கிறேன்இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டேன். கடைசி பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்து உள்ளேன். என்னுடைய கணவர் என்னுடன் இல்லை என்றாலும் அவர் செய்ய வேண்டியவை எல்லாம் நான் செய்து வருகிறேன்.
 எங்கள் குடும்பத்தில் எவ்வளவோ கஷ்டங்கள், எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மறப்பதற்கு, அந்தப் பிரச்சினைகளில் இருந்து நான் மீண்டு வருவதற்கு ஒரே மருந்து இந்த புத்தகங்கள்தான் என்றார்.
மேலும், அவர் தனது வாசிப்பு அனுபவத்தைப் பற்றி கூறுகையில்,
நான் வாரத்திற்கு நான்கு புத்தகங்களையாவது படித்து விடுவேன்நான் படித்த புத்தகங்களில் பாதிக்கும் மேல் என் பிள்ளைகள் படித்து விடுகிறார்கள். எனக்கு புத்தகத்தின் மீது ஆர்வம் வருவதற்குக் காரணம் பள்ளிப் பருவத்தில் தமிழ் பாடத்தின் மீதும், வரலாறு படத்தின் மீதும் எனக்கு இருந்த ஈடுபாடுதான்நான் பள்ளியில் படிக்கும்போது, தினமலர் நாளிதழுடன் வரும் சிறுவர் மலர் இணைப்பு புத்தகத்தை தொடர்ந்து படிப்பேன்.  சிறுவர் மலர் படிக்க வேண்டும் என்பதற்காக, 10 பைசா 20 பைசா என்று சேர்த்து, ஒன்றேகால் ரூபாய்க்கு சிறுவர் மலர் இணைப்பு வரும் அன்று தவறாமல் தினமலர் வாங்குவேன். சிறுவர் மலரை முழுவதுமாக படிப்பேன். இப்படித்தான் என்னுடைய ஆரம்ப கால புத்தக வாசிப்பு தொடங்கியது. அதற்குப் பிறகு நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து, தொடர்ந்து புத்தகங்கள் எடுத்து படித்து வருகிறேன். இதுவரை ஆயிரத்துக்கும் மேலான புத்தகங்கள் படித்திருப்பேன். பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் படிப்பேன். இரவு எத்தனை மணி வரை படிப்பேன் என்று எனக்கே தெரியாது. முன்னணி எழுத்தாளர்களின் புத்தகங்களை எல்லாம் படித்திருக்கிறேன். இந்த விழாவில் ஒருவர் பேசும் பொழுது 'புத்தகங்கள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும்' என்றார். அவரது பேச்சைக் கேட்டபோது, எனக்கு என் பிள்ளைகள் ஞாபகம் வந்தது. ஏனென்றால், என் பிள்ளைகளும் 'புத்தகங்கள் படிக்கும்போது, இந்த புத்தகம் நம்மை எங்கோ அழைத்துச் செல்கிறது' என்று சொல்வார்கள். எனக்கும் அப்படிப்பட்ட அனுபவம்தான்அவரது கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றாக இருக்கிறது.  இந்த புத்தக வாசிப்பு பழக்கம் மட்டும் என்னிடம் இல்லாமல் போய் இருந்தால் என் குடும்ப சூழ்நிலையால் நான் என்றோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்" என்றார் உருவாக்கமாக. 
அவரது பேச்சு என்னை கண்கலங்க வைத்தது. 
அவர் பேச்சை நிறுத்துமாறு சைகை செய்தேன். அமைதியானார். நான் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் பேசியிருப்பார். 
அவர் பரிசு பெற்ற படம் இந்து தமிழ் நாளிதழில் வெளியாகி இருந்தது. அந்த தாளை அவரிடம் கொடுத்தேன். மகிழ்ச்சியோடு பெற்றுச் சென்றார். 
எளிய மனிதர் - எவ்வளவு கருத்துகள்?  வியந்தேன்.
இந்த சம்பவத்தால் நேற்று இரவு நெடுநேரம் ஆகியும் எனக்கு தூக்கம் வரவில்லை. இதை ஒரு பதிவாக போட்டால் என்ன? என்று தோன்றியது. உடனே இந்தப் பதிவை எழுதினேன். 
நன்றி. வணக்கம்.
- நூலகர் சி. சரவணன்.

Comments

இது போன்ற வார்த்தைகளால் தான் இன்று வரை நூலகங்கள் உயிர்ப்புடன் உள்ளது.மேலும் அலைபேசி மற்றும் தொலைக்காட்சி வரவால் எந்திரமையமாக வாழ்க்கை மாறிவிட்டது.இந்த நிலையில் நூலகங்கள் வடிகாலாக இருக்கிறது என்றால் மிகையாகாது!
இது போன்ற வாசகர்கள் வருகையே நூலகர்களுக்கு கிடைக்கும் உண்மையான அங்கிகாரம்!