ஊருக்கு இளக்காரம் பிள்ளையார் கோயில் பூசாரி என்கிறார்களே? அதன் பொருள் என்ன?

 ஏமாளியாக இருப்பவர்களை பலரும் பலவிதமாக கிண்டல் செய்வதுண்டு. இது போன்ற நேரங்களில், 'ஊருக்கு இளக்காரம் பிள்ளையார் கோயில் பூசாரி' என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதன் பொருள் என்ன தெரியுமா?

பொதுவாக, பிள்ளையார் கோயிலில் பூசாரிகள் மிகவும் சாதுவாக இருப்பார்கள். அவர்கள் சாமி கும்பிட வரும்  அனைவரையும் பொறுமையாக, சிரித்த முகத்துடன் வரவேற்பது வழக்கம்.

சாமி கும்பிடச் வருபவர்கள், பூசாரியிடம் ஏதாவது தாறுமாறாகப் பேசினாலும் கோபித்துக் கொள்ள மாட்டார்.  "ஏன் லேட்டாக வந்தீர்கள்?"

 "ஏன் காலதாமதம் செய்கிறீர்கள்?" என்று பெண்களும் அவரை வசை பாடுவதுண்டு. மருமகள் மீது இருக்கும் கோபத்தை மாமியார்கள் பூசாரியிடம் காட்டுவதும் உண்டு. மருமகள்களும் யார்மேலேயே இருக்கும் கோபத்தை பூசாரியிடம் காட்டுவதும் உண்டு.

பெண்கள் மட்டுமல்ல, சிறுவர்களும் பிள்ளையார் கோயில் பூசாரியை கிண்டல் செய்வதை நாம் பார்க்கிறோம். இப்படி, சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏளனமான ஒரு ஜீவனாக இருப்பவர் பிள்ளையார் கோயில் பூசாரி. இதனால்தான் "ஊருக்கு இளக்காரம் பிள்ளையார் கோயில் பூசாரி" என்னும் சொற்றொடர் வந்திருக்கக்கூடும்.

ஆனால், அதே ஊரில் வேறு சில கோயில்களும் இருப்பதுண்டு. கிராமங்களில் முனியப்பன் கோயில், அம்மன் கோயில் முதலான கோயில்கள் இருக்கும். அந்த கோயில்களிலும் பூசாரிகள் இருப்பார்கள். ஆனால், கிராம மக்கள் அந்த பூசாரிகளிடம் அத்துமீறிய வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்மீது ஒரு இனம்புரியாத பயம் மக்களுக்கு இருக்கும். அது ஏன்?

பிள்ளையார் கோயில் பூசாரிகளிடம் இருப்பது விபூதித் தட்டும், மணியும்தான். ஆனால், அம்மன் கோயில், முனியப்பன் கோயில் பூசாரிகளிடம் இருப்பது கிடாய் வெட்டும் கொடுவாள். அதனால்தான், கிராம மக்கள் இந்த பூசாரிகளிடம் வம்பு செய்வது இல்லை.


நூலகர் சி.சரவணன்.

மாணவர் கதிர் (2022 பிப்ரவரி)




Comments

Sevanthi durai said…
பாவம் பிள்ளையார் கோவில் பூசாரி